அதுவும் தனது மகனாலேயே அம்மாக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இவளுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தன் கணவனிடம் சொல்லி, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கடைசியில் முதியோர் இல்லத்தில் சேர்க்கின்ற கொடுமைகளையும் இவ்வுலகத்தில்தான் பார்க்கிறோம். எனவே ஒரு பெண்ணை நமது வீட்டிற்கு மருமகளாக எடுத்துக் கொண்டால், அவள்தான் நமக்கு உறுதுணையானவள், மருமகள்தான் நமக்கு எதிர்காலம் என்று நினைத்து அவள்மீது பாசம் செலுத்தி நடந்துகொண்டால், குடும்பமும் நன்றாக இருக்கும்; அநீதி இழைத்தவராகவும் ஆகமாட்டோம்; நமது எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும். இப்படி பலவகையில் இது நன்மையைப் பெற்றுத் தரும். உலகத்திலும் நன்மை, மறுமையிலும் அளவிலா நன்மையைப் பெற்றுத் தருகிறது. நமது ஆண் பிள்ளைகளும் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி மகிழ்ச்சியான குடும்பாக வாழ்வார்கள். அப்படி இல்லாமல் மருமகள் மாமியார் சண்டை நடக்கிற குடும்பங்களில் இவர்களது பஞ்சாயத்தைத் தீர்ப்பதிலேயே ஆண்கள் நிம்மதி இழந்து விடுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதாவது திருமணம் முடித்து பத்து ஆண்டு இடைவெளியில் இருக்கிற பெரும்பாலான ஆண்கள் நிம்மதியாக இருக்க முடியாததற்குக் காரணம், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் சண்டைதான். வெளிநாட்டில் அல்லது வெளியூர்களில் சம்பாதிப்பதற்குச் சென்றவர்கள் இரண்டு ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் கழித்தாலும் சொந்த ஊருக்குச் செல்வதை வெறுப்பதற்குக் காரணமே இந்த மாமியார் மருமகள் சண்டைதான்.